பைக் டாக்சி ஓட்டுவோர் மீது நடவடிக்கையா? அமைச்சர் சிவசங்கர் பதில்!

பைக் டாக்சி நடைமுறையில் உள்ள சாதக பாதகங்களை அறிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த குழு அறிக்கைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Minister Sivasankar say about Bike taxi

சென்னை :தனிநபர் பயன்பாட்டிற்காக பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனமானது, தற்போது சில முக்கிய நகரங்களில் வணிக நோக்கத்திற்காக ‘பைக் டாக்சி’ எனும் பெயரில் பலர் இயக்கி வருகின்றனர். 4 சக்கர வாகனத்திற்கே வெள்ளை, மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் கொடுக்கப்பட்டு இது சொந்த பயன்பாட்டு வாகனம், இது வணிக நோக்கத்திற்காக வாகனம் என இருக்கும் போது பைக் டாக்சி நடைமுறை விதிமுறைகளை மீறுகிறதா என்ற கேள்விகளும் எழுகிறது.

இப்படியான சூழலில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி பைக் டாக்சி ஒட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு, போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக தினமும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பைக் டாக்சி விவகாரம் குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ” மக்கள் வாழும் காலசூழ்நிலைக்கு ஏற்ப சட்டதிட்டங்கள் மாறுபடும். இப்படியான பைக் டாக்சி நடைமுறையில் உள்ள சாதக பதக்கங்களை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளோம். அந்த உயர அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பிறகு பைக் டாக்சி பற்றி முடிவு செய்யப்படும். ” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், பைக் டாக்சி ஓட்டுவோருக்கும், ஆட்டோ , டாக்சி ஓட்டுவோருக்கும் இடையேயான தொழில் போட்டி மோதல் குறித்த கேள்விக்கு, அதிகாரிகளின் ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான் அதுபற்றியும் நடவடிக்கை எடுக்க முடியும். இது ஒரு தொழில் போட்டி என்றும் குறிப்பிட்டார்.