டெல்லி : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தால் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் குறித்து பொதுமக்களிடையே நிலவி வரும் குழப்பங்களுக்கு பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா (PCI) மற்றும் மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் செய்யும் தினசரி UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், இது எப்போதும் போல முற்றிலும் இலவசமாகத் தொடரும் என்றும் PCI உறுதிப்படுத்தியுள்ளது.
மளிகைக் கடைகள் மற்றும் சிறிய வியாபாரிகள் UPI மூலம் பணம் பெறுவதற்கு எந்தவிதமான கட்டணமோ அல்லது வணிக தள்ளுபடி விகிதமோ (MDR) செலுத்தத் தேவையில்லை. சிறு வணிகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவானது, குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் (குறிப்பாக பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு) வணிக தள்ளுபடி விகிதத்தை (MDR) அமல்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.
ஒருவேளை வணிகர்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டாலும், அது வணிகர்களுக்கும் கட்டண சேவை வழங்குநர்களுக்குமிடையேயான வர்த்தக ஒப்பந்தம் மட்டுமே தவிர, அதற்காக நுகர்வோர்கள் அல்லது மக்கள் யாரும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
