செப்டம்பர் 6 வரை பள்ளிகளை திறக்க தடை விதிப்பு – உத்தர பிரதேச அரசு!

The Uttar Pradesh government has banned the opening of schools in the state till September 6.

வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி வரை உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் பைரோசாபாத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 32 பேர் குழந்தைகள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையினை நேரில் சென்று ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செப்டம்பர் 1 அதாவது இன்றிலிருந்து ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்பொழுது டெங்குவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதால் உத்திர பிரதேச மாநிலம் பைரோசாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை திறப்பதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.