‘டவ்-தே’ புயல்: பார்க் பி 305 என்ற கப்பலில் இருந்த 184 பேர் மீட்பு,மீதமுள்ள 89 பேரை தேடும் பணி தீவிரம்..!

‘டவ்-தே’ புயலில் சிக்கிய ‘பார்க் பி 305’ என்ற கப்பலில் இருந்து 184 பேரை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.மீதமுள்ள 89 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவாமற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.
புயல் கரையைக் கடந்தபோது மும்பை மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் 175 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதனால்,குஜராத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து,புயலில் சிக்கியவர்களை கடலில் இருந்து மீட்பதற்காக,இந்திய கடற்படைக் கப்பல்கள் (ஐ.என்.எஸ்) பியாஸ், பெத்வா மற்றும் டெக் ஐ.என்.எஸ் கொச்சி மற்றும் ஐ.என்.எஸ் கொல்கத்தா ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டன.
இதனையடுத்து,மும்பையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘பார்க் பி 305’ என்ற கப்பலிலிருந்து 273 பணியாளர்களில் 184 பேரை இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.மேலும்,மீதமுள்ள 89 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.