வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் – ராகுல் காந்தி!

Rahul Gandhi has gone to Parliament in a tractor to protest against agricultural laws.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு சென்ற ராகுல் காந்தி புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை விவசாயிகளுடன் மத்திய அரசு பத்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அது பலனளிக்கவில்லை.  இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கியதை அடுத்து நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றம் அருகில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி கவர்னர் அனுமதி அளித்திருந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து அப்பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகிய ராகுல் காந்தி அவர்கள் டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி அவர்கள், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராடி வரக்கூடிய விவசாயிகளின் உணர்வுகளை தான் புரிந்து கொண்டதாகவும் விவசாயிகளின் குரல்கள் அடக்கப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடத்தப்படுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புதிய வேளாண் திட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும், இந்த புதிய சட்டம் மூன்று நான்கு வியாபாரிகளுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளது என்பதை நாடு அறியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.