டெல்லி :நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி கடைசியில் தொடங்கி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட அமர்வு நடைபெறுகிறது. இன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளன. மும்மொழி கொள்கை விவகாரம் பற்றி மத்திய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பதாக குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதைப்போல, தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே, இதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் விவாதம் நடைபெறவுள்ளது. அதேசமயம்,நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வில், எதிர்க்கட்சிகள் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ (One Nation, One Election) திட்டத்தைப் பற்றி பேசுவதற்கும் முடிவெடுத்துள்ளனர்.
மேலும், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் வழங்கியிருந்த சூழலில், இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
