ஆந்திராவில் கோர விபத்து : பேருந்து மீது கார் மோதி 4 பேர் பலி!

ஆந்திராவில் தனியார் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

andhra road accident

ஆந்திரப் பிரதேசம் :மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை கடந்து எதிர்த்திசையில் வந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று தெரிகிறது.விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தீவிரமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்து நிகழ்ந்த இடம் நந்தியாலா மாவட்டத்தின் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், போக்குவரத்து சில மணி நேரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.விபத்துக்கு காரின் அதிவேகமும் ஓட்டுநரின் கவனக்குறைவும் முக்கிய காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விபத்து ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சாலை பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன. அதிவேகம் மற்றும் கவனக்குறைவு காரணமாக ஏற்படும் விபத்துகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.