#Breaking:மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது...!

Chennai Maharishi Vidya Mandir School teacher Ananth was arrested by the police under the Pocso Act

பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து,பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.

அதாவது,மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முன்னாள் மாணவி ஒருவர்,ஆனந்த் மீதான பாலியல் புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.மேலும்,சில மாணவிகள், குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதினர்.

அவ்வாறு புகார்கள் வந்ததை அடுத்து ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் புகார் தொடர்பாக நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் விசாரணை நடக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு, குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது,அவரால் பாதிக்கப்பட்ட மாணவி எழுத்துப்பூர்வமாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து,தற்போது ஆனந்தை போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து,மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணை முடிந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.