முத்தமிழ் கலைஞரோட வாரிசு நீங்க...! மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த நடிகர் சிவக்குமார்...!

Provide a good government in Tamil Nadu as Stalin's rule was called the Golden Age.

தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி பொற்காலம் என்று சொல்வது போல் ஒரு நல்லாட்சியை  வழங்குங்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை பதிவு செய்த நிலையில், இன்று அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதனை அடுத்து மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்ததோடு, கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார். 19 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் 172 இடங்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதற்குப்பின் 25 ஆண்டுகளுக்குப்பின் 125 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாலின் அவர்கள் இமாலய சாதனை. அதுபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று தாத்தாவிற்கு பேரன் என நிரூபித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் அவர்களுக்கு முதல் நாளிலேயே எனது வேண்டுகோள். கொரோனா காலத்தில் நமது மக்களை காப்பாற்ற வேண்டும். மருத்துவமனைகளிலும் மருந்து கடைகளிலும் காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டமாக இருப்பதை பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளது. ஆஸ்பத்திரியில் படுக்கையில் இல்லை. படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தால், வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலகட்டத்தில் மக்களை காப்பாற்றுங்கள்.

ஆந்திரா, கர்நாடகா கேரளாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தந்த மொழிகளை படித்தே ஆகவேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் குழந்தைகள் தமிழ் கற்காமலே பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலைக்கு செல்லும் அவலம் காணப்படுகிறது. செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞரின் வாரிசு நீங்கள். எனவே தமிழ் மொழியில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் மட்டும்தான் தமிழ் நிச்சயமாக வாழும்.

ஏரி, குளங்களை பராமரித்து விவசாயத்தை செழிக்க செய்ய உதவுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி பொற்காலம் என்று சொல்வது போல் ஒரு நல்லாட்சியை  வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். என்று அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.