ஃபெஞ்சல் புயலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி இதுதான்! வெதர்மன் ரிப்போர்ட்!

ஃபெஞ்சல் புயலால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறு பகுதி அதிகமாக பாதிக்கப்படும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Cyclone Fengal

சென்னை :வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்னும் சில மணி நேரங்களில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார வடமாவட்டங்கள், புதுச்சேரி வரையிலான கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

காரைக்கால் – மாமல்லபுரம் இடையே மரக்காணம் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில்,  ” ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த மழை பெய்ய உள்ளது. இப்போது பலத்த காற்று வீசுகிறது. இந்த புயல் கல்பாக்கம்-செய்யூர் இடையே நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் தற்போது மகாபலிபுரம் கல்பாக்கம் கடற்கரையை நெருங்கி கொண்டிருக்கிறது. சென்னையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை தற்போது பெய்யும்.  செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கனமழையால் அதிகம் பாதிக்கப்படும். புதுச்சேரியும் புயல் கனமழையால் அதிகம் பாதிக்கப்படும்.

நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால, வானிலை ஆய்வு மைய உத்தரவுகளை தவறாமல் பின்பற்றுங்கள் ” என பதிவிட்டுள்ளார்.