தகாத நடத்தை குற்றச்சாட்டுக்காக பதவி விலகினர் மார்ட்டின் சோரல்.!

இவற்றில் இரண்டு லட்சம்பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக மார்ட்டின் சோரல் 1986ஆம் ஆண்டில் இருந்து 33ஆண்டுகள்

உலகின் மிகப்பெரிய விளம்பர நிறுவனமான WPP யின் தலைமைச் செயல் அலுவலர் மார்ட்டின் சோரல் மீது தகாத நடத்தை குற்றச்சாட்டுக் கூறப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். வயர் அண்ட் பிளாஸ்டிக் புராடக்ட்ஸ் என்கிற அந்த நிறுவனத்துக்கு 112 நாடுகளில் மூவாயிரம் அலுவலகங்கள் உள்ளன.

இவற்றில் இரண்டு லட்சம்பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக மார்ட்டின் சோரல் 1986ஆம் ஆண்டில் இருந்து 33ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தன் நிறுவனத்துக்காக ஜே வால்டர் தாம்சன், ஓகில்வி அண்ட் மாதர் ஆகிய அமெரிக்க நிறுவனங்களையும், கிரே குளோபல் என்கிற பிரிட்டிஷ் நிறுவனத்தையும் இன்னும் பல நிறுவனங்களையும் பெருந்தொகைக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்தப் பணிகளுக்காக 2015ஆம் ஆண்டில் மட்டும் இந்திய மதிப்பில் 650கோடி ரூபாயை ஊதியமாகப் பெற்றுள்ளார். இவருக்கான ஊதிய உடன்படிக்கைக்கு நிறுவனத்தின் 60விழுக்காடு பங்குதாரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அதை நிராகரித்தனர்.

அவரது நடத்தை குறித்து நிறுவனத்தின் இயக்குநர் அவையில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக நிறுவனம் ஒரு வழக்கறிஞரைக் கொண்டு விசாரணை நடத்தியது. இந்த வார இறுதியில் விசாரணை அறிக்கை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மார்ட்டின் சோரல் பதவி விலகியுள்ளார்.

சோரலுக்கு WPPநிறுவனத்தில் ஒன்று புள்ளி எட்டு விழுக்காடு பங்குகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 2321கோடி ரூபாயாகும். அவருடைய மொத்தச் சொத்து மதிப்பு 4600கோடி ரூபாயாகும்.