நார்தாம்ப்டன் :ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி, இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியில், 41 வயதான ஏபி டி வில்லியர்ஸ், “மிஸ்டர் 360°” என்ற பெயருக்கு ஏற்ப, தனது இளமை திரும்பியது போல விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முதலில் பேட்டிங் செய்த அவர், 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்து அரை சதமடித்தார்.
இவரது அதிரடி ஆட்டத்தால், தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 208/6 என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. ஜேஜே ஸ்மட்ஸ் (17 பந்தில் 30), ஹாஷிம் ஆம்லா (22), மற்றும் ஜாக் ரூடால்ஃப் (24) ஆகியோரின் ஆட்டமும் இந்த இலக்கை பலப்படுத்தியது. இந்திய அணி 209 ரன்கள் இலக்கை துரத்தியபோது, டி வில்லியர்ஸ் மற்றொரு மறக்க முடியாத தருணத்தை உருவாக்கினார். 8வது ஓவரில், இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் யூசுஃப் பதான் (5 ரன்கள்) அடித்த உயரமான பந்து பவுண்டரி லைனை நோக்கி சென்றது.
டி வில்லியர்ஸ், பவுண்டரி கயிறுக்கு அருகில் ஓடி, குதித்து அந்த பந்தை அற்புதமாக பிடித்தார். ஆனால், அவர் கயிறைத் தொடுவதற்கு முன், பந்தை சக வீரர் சாரல் எர்வீயிடம் துல்லியமாக வீசினார். எர்வீ முழு நீளத்தில் டைவ் செய்து கேட்சை பூர்த்தி செய்தார். இந்த அசத்தலான ரிலே கேட்சை மூன்றாவது நடுவர் ஆய்வு செய்து, யூசுஃப் பதான் ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
இந்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாக, ரசிகர்கள் டி வில்லியர்ஸின் உடற்தகுதியையும், 41 வயதிலும் இன்னும் பழைய மாதிரி சிறப்பாக அவர் விளையாடியதை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். டி வில்லியர்ஸின் இந்த ஆல்-ரவுண்ட் ஆட்டம் மற்றும் அரை சதமும், அற்புதமான ரிலே கேட்சும் அவருக்கு ஆட்டநாயகன் விருதைப் பெற்றுத் தந்தது. தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி, WCL 2025 தொடரில் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் முதலிடத்தில் நிற்கிறது. மறுபுறம், இந்திய சாம்பியன்ஸ் அணி ஒரு புள்ளியுடன் பட்டியலில் கடைசியாக உள்ளது. டி வில்லியர்ஸின் இந்த ஆட்டம், அவரது பழைய பாணியையும், திறமையையும் ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டி, அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
unknown node