போர்ச்சுகல் : கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கனவு உலகக்கோப்பைத் தொடர், சோகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற 'ரவுண்ட் ஆஃப் 16' (Round of 16) நாக் அவுட் சுற்றில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியின் மூலம், ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை கனவு தகர்ந்து, அவர் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சிகள் பலரையும் கவலையடைய செய்துள்ளது.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதிய இந்த ஆட்டத்தில், கோல் ஏதும் அடிக்கப்படாமல் ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (Stoppage time), ஸ்பெயின் அணியின் மாற்று வீரர் மிக்கல் மெரினோ (Mikel Merino) அடித்த கோல், போர்ச்சுகல் அணியின் உலகக்கோப்பை கனவைச் சிதைத்தது. 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயின் அணி தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, மிகுந்த சோகத்துடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். உலகக்கோப்பையிலிருந்து இப்படி வெளியேறுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. நான் என்னால் முடிந்தவரை முழுமையாகப் போராடினேன். மனசாட்சிப்படி நான் சிறந்ததைக் கொடுத்திருக்கிறேன்," என்று தெரிவித்தார்.
இது எனது கடைசி உலகக்கோப்பை என்பது உண்மைதான். ஆனால், போர்ச்சுகல் அணிக்காக நான் இனி விளையாடுவேனா இல்லையா என்பது குறித்து அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டேன். தற்போது சிறிது காலம் எனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன்," என்று கூறினார்.
போர்ச்சுகல் அணிக்காக 2016 யூரோ கோப்பை மற்றும் இரண்டு நேஷன்ஸ் லீக் பட்டங்களை வென்று தந்ததை நினைவுகூர்ந்த அவர், "ரொனால்டோ வருவதற்கு முன்பு போர்ச்சுகல் ஒரு பெரிய பட்டத்தைக் கூட வென்றதில்லை. நான் மூன்று பட்டங்களை வென்று கொடுத்திருக்கிறேன். 2016 யூரோ கோப்பை வெற்றி எனக்கு உலகக்கோப்பையை விடவும் பெரியது," என்று தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார்.
போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸின் வெளியேற்றம் குறித்தும் பேசிய ரொனால்டோ, "அவருடன் பணியாற்றியதை நான் நேசித்தேன். அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர் மற்றும் மனிதர். போர்ச்சுகல் அணிக்காக அவர் செய்த சேவையைப் பாராட்ட வேண்டும்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான ரொனால்டோவின் உலகக்கோப்பை பயணம் இத்துடன் முடிவுக்கு வந்தது, விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
