ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை.
காரணம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி டக் அவுட், சஞ்சு சாம்சன் டக் அவுட் , சிவம் துபே 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 22 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும் அடுத்து வந்த ரிங்கு சிங்குடன் கை கோர்த்த தொடக்க வீரர் ரோஹித் சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர்.
இதில் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 69 பந்துகளில் 11 பவுண்டரி , 8 சிக்ஸர் உட்பட 121* ரன்களுடனும், ரிங்கு சிங் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர் உடன் 69* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 212 ரன்கள் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியில் ஃபரீத் அகமது மாலிக் 3 விக்கெட்டையும், அஸ்மத்துல்லா உமர்சாய் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 213 ரன்கள் இலக்குடன்ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர்.
அதிரடி காட்டிய ரோகித் சர்மா, ரிங்கு சிங்… 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா ..!
இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த அஸ்மத்துல்லா உமர்சாய் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய முகமது நபி 16 பந்தில் 3 சிக்ஸர் , 2 பவுண்டரி என 34 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் குல்பாடின் நைப் 23 பந்தில் 4 பவுண்டரி , 4 சிக்ஸர் என 55* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாகஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 212 ரன்கள் எடுத்தனர். இதனால் போட்டி டை ஆனது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டையும், குல்தீப் யாதவ், அவேஷ் கான் தலா 1 விக்கெட்டை பறித்தனர். பின்னர், சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. முதலில் இறங்கியஆப்கானிஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து இறங்கிய இந்திய அணி 16 ரன்கள் எடுத்ததால் மீண்டும் சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது.
2-வது சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 11 ரன்கள் எடுத்தனர். 12 ரன்கள் இலக்குடன் இறங்கியஆப்கானிஸ்தான் அணி 1 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டி கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.
