சஞ்சு சாம்சன் வெளிய இருந்தால் அவ்வளவு தான்...இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஆகாஷ் சோப்ரா!

இந்திய அணியில் அனைவரும் திறமையாக இருப்பதன் காரணமாக , அணி தேர்வை ஒரு சிக்கலான முடிவாக மாற்றுவதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Sanju Samson and Aakash Chopra

சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, 2025 ஆசியக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் பலம் மற்றும் சவால்கள் குறித்து தனது யூடியூப் வீடியோவில் (செப்டம்பர் 8, 2025) பேசினார். இந்திய அணியில் திறமையான வீரர்கள் ஏராளமாக இருப்பதால், யாரை அணியில் இருந்து வெளியே வைப்பது என்பது பெரும் தலைவலியாக உள்ளது என்று அவர் கூறினார்.

இது குறித்து பேசிய அவர் “எந்த வீரரை வெளியே உட்கார வைத்தாலும், அது தவறு செய்வது போல் உணரப்படும். உதாரணமாக, சஞ்சு சாம்சனை வெளியே வைத்தால், அவர் தொடக்க வீரராக நிலையாக ஆடி, 12 போட்டிகளில் 3 சதங்கள் அடித்திருப்பதால், அது நியாயமற்றதாகத் தோன்றும்,” என்று அவர் தெரிவித்தார்.மேலும், “ரிங்கு சிங்கை வெளியே வைத்தாலும், அது தவறாக உணரப்படும். குல்தீப் யாதவுக்கு இடம் கொடுக்க முடியாவிட்டால் பிரச்னையாகும்.

அக்ஸர் பட்டேலை மேல் வரிசையில் ஆட வைக்க முடியாவிட்டாலும், அது அநீதியாகத் தெரியும். எனவே, அணி தேர்வு ஒரு இறுக்கமான கயிற்றில் நடப்பது போல உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் விமர்சனம் வரலாம். இது பலவீனம் இல்லை, ஆனால் இப்படித்தான் இருக்கிறது,” என்று சோப்ரா விளக்கினார். இந்திய அணியில் அனைவரும் திறமையாக இருப்பதன் காரணமாக , அணி தேர்வை ஒரு சிக்கலான முடிவாக மாற்றுவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆசியக் கோப்பைக்கான உத்தி குறித்து பேசிய சோப்ரா, “பனி இருந்தால், டாஸ் வென்றால் முதலில் பந்துவீசி, இலக்கை துரத்துவது சிறந்த உத்தியாக இருக்கும். பனி இல்லையென்றால், இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. உத்தியை வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல, அணியின் ஆட்ட பாணியை மையப்படுத்தியும் தீட்ட வேண்டும்,” என்று கூறினார்.

மேலும், இந்திய அணி தற்போது ஆக்ரோஷமான பேட்டிங் பாணியை பின்பற்றி வருவதாகவும், இது அவர்களை மற்ற அணிகளை விட தனித்து நிற்க வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.“இந்த அணி ஒரு புதிய, தாக்குதல் பாணியில் தொடர்ந்து பேட்டிங் செய்கிறது. மற்றவர்களை விட ஒரு படி மேலாக இருக்க வேண்டுமானால், அது ஆட்டத்தில் தெரிய வேண்டும். எனவே, இந்திய அணியின் உத்தி, முழு வெற்றியை நோக்கி, பெருமைமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்,” என்று சோப்ரா முடித்தார். இந்திய அணியின் தற்போதைய திறமையும், ஆக்ரோஷமான ஆட்டமும், ஆசியக் கோப்பையில் முழு வெற்றியை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.