காற்று மாசு அதிகமாக இருந்தும் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தியது ஏன் ....? உச்சநீதிமன்றம் கேள்வி!

The Supreme Court has questioned the Delhi government as to why it forced students to come to school despite the high level of air pollution in Delhi.

டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருந்தும் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தியது ஏன் என உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு மிக அதிக அளவில் இருந்தது. காற்றின் தரக்குறியீடு 382 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது மக்களின் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் வாகனங்கள் செல்வதற்கும், கட்டுமான பணிகள் மற்றும் கட்டிடங்கள் இடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதுபோல அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் எனவும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பள்ளி, கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் காற்றின் மாசு அதிகமாக உள்ள நிலையில் டெல்லியில் பள்ளிகளைத் திறந்தது ஏன் என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வேலைக்கு செல்பவர்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்றுமாறு தெரிவித்துவிட்டு, மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியது ஏன் என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.