"எம்.எஸ்.தோனி விளையாடிய இடம்...பி.டி.உஷா ஓடிய இடம்...ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதே"-எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம்..!

Where MS Dhoni played; where PT Usha ran; So, do not sell railway grounds to private, for Central Railway Department Letter from MP Su.Venkatesh

எம்.எஸ்.தோனி விளையாடிய இடம்;பி.டி.உஷா ஓடிய இடம்; எனவே,ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதே,

மத்திய ரயில்வே துறைக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்.

இந்திய ரயில்வேக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை வணிகப் பயன்பாட்டிற்காக ரயில் நில மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயிலுக்கு,மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்.கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும்,இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை “ரயில் நிலம் மேம்பாட்டு ஆணையத்தின்” வசம் வணிக பயன்பாட்டு நோக்கத்திற்காக ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் தனியாருக்கு விற்பதுதான். இப்பட்டியலில் சென்னை ஐ.சி.எப் விளையாட்டு வளாகமும் உண்டு.

ரயில்வே பயணியர் சேவை போக்குவரத்து உட்பட பல ரயில் நிறுவனங்களை தனியாருக்கு விற்கிற முடிவை மக்கள் கவலையோடு எதிர் நோக்கியுள்ள சூழலில் விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பது தேச விரோதம் ஆனது. ரயில்வே வாரியத்தின் 18.05.2021 கடிதம் இந்த அபாயத்தை அமலுக்கு கொண்டு வர முனைந்துள்ளது.

இந்திய ரயில்வே ஒரு விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை கொண்டுள்ளது. இது சர்வதேச விளையாட்டு வீரர்களின் 50 % யையும், பதக்க வீரர்களில் 1/3 பங்கையும் கொண்டிருக்கும் தனிப் பெரும் விளையாட்டு அமைப்பாகும். இந்த விரர்கள் எல்லாம் கீழ் மட்டப்பணிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களே.

இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனி பயணச்சீட்டு பரிசோதகர் ஆவார்.தங்கக் கால்களுக்கு சொந்தக் காரரான பி.டி.உஷா அவர்களும் பயணச்சீட்டு “பரிசோதகர் ஆவார். இவர்கள் எல்லாக் ரயிலவே மைதானங்களில் உள்ள ஆதார வளங்கள், வசதிகளை பயன்படுத்தியே இந்த உயரங்களை எட்டியுள்ளார்கள்.இந்தியா இதுவரை வென்றுள்ள 21 ஒலிம்பிக் பதக்கங்களில் 13 ரயில்வே ஊழியர்கள் பெற்றுத் தந்தவை. அதுபோல அர்ச்சுனா விருது பெற்றவர்களில் பலர்,ரயில்வே ஊழியர்கள்.

திருமிகு சுசில்குமார் – மல்யுத்தம்,

பி.டி.உஷா – தடகளம்,

பால்கரன்- ஹாக்கி,

வெள்ளைச்சாமி – பளு தூக்குதல்,

ராஜரத்தினம் – கபடி,

ஜெகன்நாதன் மேசை பந்து,

தமிழ்ச் செல்வன் – உடற்கட்டு

இவர்கள் எல்லோருமே விளையாட்டுக்கான ஆதார வளங்கள் கட்டணம் இன்றி ரயில்வே மைதானங்களில் சாமானிய மக்களுக்கும் கிடைத்ததாலேயே முன்னேறி வந்தவர்கள். இல்லையெனில் இவர்களுக்கு இந்த வளங்கள் எங்கே கிடைத்திருக்கும்? என்பது கேள்விக் குறி.

சமூகத்தில் அடித்தள ஆற்றல்களை அடையாளம் காணவும், பயன்படுத்தவும்,வளர்க்கவும் இது போன்ற அரசு கட்டமைப்புகள் தேவை. அப்போதுதான் உலக அளவிலும், தேசிய அளவிலும் கொண்டாடத்தக்க பலர் கிடைப்பார்கள்.

இது வெறும் பணம் பண்ணுகிற செயல் அல்ல. தேசத்தின் பெருமையைப் பறை சாற்றுகிற ஆற்றல் மிக்க அடித்தள வீரர்களுக்கு வழி அடைக்கிற அபாய முடிவாகும்.விளையாட்டுத் துறையின் விரிவான ஈர்ப்பை சிதைக்கிற செயல் ஆகும்.

ஆகவே இத்தகைய தவறான முடிவை ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டுமென இன்றைய (10.06.2021) கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

விளையாட்டை விபரீதமாக மாற்றாதீர்கள்!

அமைச்சரே தோனிகள் ஆடட்டும்! உஷாக்கள் ஓடட்டும்!”,என்று கூறினார்.