#Breaking:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் கைது!

Three more squads have been set up to nab former AIADMK former minister Rajendra Balaji in a money laundering case.

விருதுநகர்:பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து,முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்,அவரை கைது செய்யும் முயற்சியில் 3 தனிப்படைகள் அமைத்து நேற்று திருச்சி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,அதன் எண்ணிக்கை தற்போது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்.பி.மனோகரன் தகவல் அளித்துள்ளார்.

இதற்கிடையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.