முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி – மத்திய அரசு எச்சரிக்கை...!

The Central government has warned of attempts to hack the e-mail IDs of officials in some key departments,

மத்திய அரசின் பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக  மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா,பிக் பாஸ்கெட்,டொமினோஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தளங்களிலிருந்து,பல ஆயிரக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில்,மத்திய அரசின் பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி நடந்திருப்பதாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக,மத்திய அரசு அனுப்பியுள்ள எச்சரிக்கை அறிக்கையில்: உயர்அதிகாரிகளின் வாட்ஸ்-அப் கணக்கிற்கும்,மெசேஜ்களுக்கும் லிங்க் ஒன்றை அனுப்பி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தகவல்களை பதிவு செய்யுமாறு ஹேக்கர்கள் கூறுவதாகவும்,அவ்வாறு அந்த லிங்கை திறந்தால் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம் போன்று போலியான இணையதளம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து,nic.in மற்றும் gov.in போன்ற தளங்களை குறிவைத்து தாக்குதல் நடப்பதாகவும்,இதற்கான போலி லிங்குகள் மற்றும் இணையதளம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும்,அதிகாரிகளின் தகவல்களை ஹேக் செய்வதன் மூலமாக,பெரிய அளவில் சதித்திட்டம் நடக்க வாய்ப்புள்ளதால்,உயர் அதிகாரிகள் தங்களுடைய இமெயில் ஐடிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.