குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கிய மத்திய அரசு ...!

The Central Government has started the process of implementing the Citizenship Amendment Act

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல் படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

கடந்த 2019 இல் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.இதனையடுத்து,குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகள் கடந்த பிப்ரவரியில்,வகுக்கப்படுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.இந்த விதிகளை வகுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவைகளுக்கு ஏப்ரல் 9 முதல் ஜூலை 9 வரை கால அவகாசம் வழங்கியதாக ராய் தெரிவித்தார்.

இதற்கிடையில்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,குடியுரிமை திருத்த சட்ட விதிகள் இன்னும் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை என்றும், கொரோனா தடுப்பூசி முடிந்ததும் சட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில்,குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் 2009 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ்,இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தற்போது மத்திய அரசு தொடங்கியுள்ளது. மேலும்,குஜராத் சத்தீஸ்கார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அதன்படி,சத்தீஸ்கார்,குஜராத், ராஜஸ்தான்,அரியானா மற்றும் பஞ்சாபில் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான்,வங்காள தேசம்  மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் என்பது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் தஞ்சம் புகுபவர்களுக்கு சில குறிப்பிட்ட விதிகளின் கீழ் குடியுரிமை வழங்கப்படும்.அவ்வாறு,குடியுரிமை பெறுவதற்கு முன்னால்,தஞ்சம் புகுந்துள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் இந்தியாவில் தங்க வேண்டும் உள்ளிட்ட சில விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதாகும்.