பாராட்டினாலும், மனதிற்குள் என்னை திட்டவே செய்வார்கள் – எம்எல்ஏ, உதயநிதி ஸ்டாலின்!

MLA Udayanithi Stalin has said that we will create a situation where there is no unemployment in Tamil Nadu.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த பின் பேசிய சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்,  தமிழகத்தில் முன்மாதிரியான சட்டமன்ற உறுப்பினராக இருக்கேன் என்று பலர் என்னை புகழ்கிறார்கள். ஆனால், என் தொகுதி மக்கள் பாராட்டினாலும், வேறு தொகுதி மக்கள் மனதிற்குள் என்னை திட்டவே செய்வார்கள்.

சேப்பாக்கம் தொகுதியில் முன்பு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி விட்டு சென்ற பணியையும், அன்பு அவர்கள் விட்டு சென்ற பணியையும் முடிக்க வேண்டு என்ற நோக்கத்தில் பணியாற்றி வருகிறேன். நான் ஒரு நாளைக்கு தொகுதிக்கு செல்லும்போது, என்னை நேரடியாக மக்கள் சந்தித்து 300 மனுக்கள் கொடுக்கின்றனர்.

இந்த மனுக்களில் சுமார் 60-70% வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்டது. எனவே இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதால் தான் இந்த வேலைவாய்ப்பு முகாமை இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்களை அமைத்து, படிப்பிற்கு தகுந்த வேலையை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தருவோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என கூறி, கலைஞரின் மறுஉருவமாக சிறப்பான ஆட்சியை இந்த மூன்று மாதத்தில் கொடுத்து, இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்கிற பெருமையை பெற்றிருக்கக்கூடிய தலைவரின் நல்லாட்சியை போற்றுவோம் என்றும் அவரது வழியில் நடப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்திலேயே சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் தான் அதிகம் கொரோனா தடுப்பூசி (ஒரு லட்சத்து 20 ஆயிரம்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். திமுக ஆட்சி அமையும் போது, பாதிப்பு மிக மோசமான நிலையில் இருந்தது. அந்த நிலைமையை தற்போது போக்கி, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.