சசிகலாவிற்கு போஸ்டர்.. மீண்டும் ஒரு அதிமுகவினர் அதிரடி நீக்கம்..!

Annathurai was expelled from the AIADMK for pasting posters welcoming Sasikala in various parts of Trichy.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

சசிகலா விடுதலையை தொடர்ந்து அதிமுகவை சார்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டி வரவேற்று வருகின்றனர். அந்த வகையில், திருச்சியின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி இரா.அண்ணாதுரை போஸ்டர் ஒட்டியிருந்தார்.

இந்நிலையில், இரா.அண்ணாதுரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.  இதுகுறித்து அதிமுக தனது அறிக்கையில், கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சார்ந்த புலியூர் இரா.அண்ணாதுரை (அந்தநல்லூர் தெற்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி, மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் திருநெல்வேலியில் நேற்று முன்தினம் சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டிய  திருநெல்வேலி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா அதிமுக கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகி (அதிமுக முன்னாள் பெருநகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்) ராபர்ட் ஹென்றி சசிகலா வரவேற்று போஸ்டர் ஓட்டினார்.