பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக, திமுக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
இந்நிலையில், பழனியில் பரப்புரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், கடவுளே இல்லை என கூறி வந்த திமுகவினர் தற்போது கையில் வேல் பிடித்து உள்ளனர் எனவும், வரும் சட்டமன்றத் தேர்தல் உடன் திமுகவின் சகாப்தம் முடிவடையும் என அவர் தெரிவித்தார்.
கடந்த 21-ஆம் தேதி ஆரணியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முதல்வர் ஆரணியை தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.