தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை!

State Election Commission consults on holding local elections in missing districts in Tamil Nadu.

தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை.

கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து புதிய மாவட்டங்களான காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

செப்.15ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் ஊராட்சி தேர்தலை நடத்துவதோடு, இந்தாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீட்டினை இறுதி செய்வது தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய  அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.