நிறைவு பெற்றது இந்திய-ஜப்பான் கடலோர காவல் படையின் கூட்டு பயிற்சி.
இதில் பாதுகாப்பை பலப்படுத்த தலைமை இயக்குனர் புதிய அறிவிப்பு.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கைபற்றினர். இந்த விவகாரத்தில் இந்திய கடலோர காவல்படை அதிரடியா செயல்பட்டு அந்த கப்பலை மீட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா – ஜப்பான் கடலோர காவல்படையின் கூட்டுபயிற்சி வங்க கடலில் நடந்தது வருகிறது. இந்த ஆண்டுக்கான இந்தியா-ஜப்பான் 19வது கூட்டுப்பயிற்சி சென்னையில் நடந்து வருகிறது. இதற்காக ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘ஏசிக்கோ’ என்ற கப்பல் 13ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலின் கேப்டன் கொய்சோ கர்டா தலைமையில் 60 பேர் கொண்ட குழு கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது.
unknown nodeஇருநாட்டு கப்பல்களும் இணைந்து ‘சாயோக் கஜின்’ என்ற பெயரில் நடுக்கடலில் நேற்று கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் டார்னியர் ரக போர் விமானங்கள், இரு நாட்டு கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன. இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் நடராஜன், ஜப்பான் கடலோர காவல்படை கமாண்டர் டக்காகிலோ ஒக்குஷிமா, கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை தளபதி பரமேஷ், ஜப்பான் கப்பல் கேப்டன் கியோசி ஹாராடா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த கூட்டு பயிற்சியை பார்வையிட்டனர். இதன்பின் இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் கே.நடராஜன் பேட்டியளிக்கையில், ‘‘இந்திய கடலோர காவல் படையில், துவக்கத்தில் 45 கப்பல்களும், 40 விமானங்கள் மட்டுமே இருந்தன.
unknown nodeஇது தற்போது, 145 கப்பல்கள், 62 விமானங்களாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், 50 கப்பல்கள் கட்டும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. வரும் 2025ம் ஆண்டுக்குள், கடலோர காவல்படையின் கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆகவும், விமானங்களின் எண்ணிக்கையை 100 ஆகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். கூட்டுப்பயிற்சி இன்று நிறைவுபெறுகிறது. இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனரின் இந்த அதிகரிப்பு இந்திய கடலோர பகுதியில் மேலும் பாதுகாப்பை வலுப்படுத்தும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.