சசிகலாவிற்கு ஆதரவாக அதிகரிக்கும் போஸ்டர்கள்..! நிர்வாகிகளை நீக்கும் அதிமுக ..!

AIADMK executives in Theni and Thanjavur posted posters welcoming Sasikala today, causing a stir among AIADMK members.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலையை தொடர்ந்து அதிமுகவை சார்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டி வரவேற்று வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சியின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி இரா.அண்ணாதுரை மற்றும் திருநெல்வேலியில் சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டிய திருநெல்வேலி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா ஆகிய இருவரையும் அதிமுக கட்சியிலிருந்து நீக்கி உள்ளது.

சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் அல்லது பேனர் வைத்தால் தொடர்ந்து கட்சியில் உள்ள அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று சசிகலாவை வரவேற்று தேனி மற்றும் தஞ்சையில் அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியது அதிமுக கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி ஆண்டிபட்டி யில் அதிமுக ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னராஜா தமிழ் நாட்டை வழிநடத்த வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் என்று போஸ்டர் ஒட்டி உள்ளார்.

அதேபோல தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி நகர துணை பொதுச்செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த சரவணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முற்போக்கு கழக நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவிற்கு ஆதரவாக அதிகரிக்கும் போஸ்டர்கள்..! நிர்வாகிகளை நீக்கும் அதிமுக ..!