இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 3,998 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி.! 10 தொகுதிகளில் ஒற்றை இலக்கம்.!

The Tamil Nadu Election Commission has released the final list of candidates for the Assembly elections with 3,998 candidates.

சட்டப்பேரவை தேர்தலில் 3,998 பேர் போட்டியிடுகிறார் என்று இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று 19ம் தேதி நிறைவடைந்தது. இதில் 7,000கும் மேற்பட்ட வேட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மார்ச் 20ம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள், மாற்று வேட்பாளர்கள் ஆகியோர் மார்ச் 22ம் தேதி தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஆண் வேட்பாளர்கள் 3,585 பேர், பெண் வேட்பாளர்கள் 411, மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் சட்டபேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,255 மனுக்களில் 4,442 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கரூர் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சென்னை ஆர்.கே.நகரில் 31 பேரும், சைதாப்பேட்டையில் 30 பேரும் போட்டியிட உள்ளனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 207 பேர் போட்டியிடுகின்றனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.