என்றைக்கும் பழனிசாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைத்ததில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே வார்த்தை மோதல்கள் தொடர்நது நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,நான் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.நான் எம்எல்ஏ-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று தெரிவித்துள்ளார். முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.மக்களின் குறைகளை கேட்கும் ஸ்டாலின் ஏன் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை என்று பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆ.கொக்குளம் ஊராட்சி மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.அவர் பேசுகையில்,முதலமைச்சர் பெரிய புத்திசாலி போல பேசி இருக்கிறார். அவர் நேரடியாக யாரும் முதலமைச்சராக ஓட்டு போட்டு வர முடியாது என்று பேசியிருக்கிறார். கலைஞர் எப்படி நேரடியாக ஓட்டுப் போட்டு வந்தாரா? என்று ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.யார் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதி மக்கள் முடிவு செய்கிறார்கள். முடிவு செய்த பிறகு தான் அந்த கட்சியில் நிற்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு ஓட்டு போடுகிறார்கள். அது தான் உண்மை.
ஆனால் இவர் எப்படி முதலமைச்சராக வந்தார் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் எல்லாம் வாக்களித்தபோது அன்றைக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார்? அம்மையார் ஜெயலலிதா அவர்கள்.அவர் இறந்து விட்ட காரணத்தினால், அந்த இடத்திற்கு இவர் வந்து இருக்கிறார். அவர் இந்த இடத்திற்கு எப்படி வந்தார்? உங்களுக்குத் தெரியும்.
யார் காலில் விழுந்தார்? எப்படி தவழ்ந்து வந்தார்? எப்படி ஊர்ந்து வந்தார்? அதற்குப் பிறகு அந்த அம்மையார் அவரை தட்டி கொடுத்து, நீ தான் சரியான அடிமை, எனக்கு மட்டுமல்ல பா.ஜ.க.வுக்கும் நீ தான் அடிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அவரை தேர்ந்தெடுத்தார்கள்.அதுமட்டுமின்றி, அவரது ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. நினைக்கிறது என்று வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் என்றைக்கும் பழனிசாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைத்ததில்லை.அவ்வாறு கவிழ்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரே நொடியில் கவிழ்த்திருக்க முடியும். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை என்று பேசியுள்ளார்.