மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டியிருந்தார். இந்த விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்குவார் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து, முதலாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. என்.சங்கரய்யாவுக்கு சுதந்திர தினத்தன்று 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். என்.சங்கரய்யாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது இல்லத்திற்கே சென்று விருதை வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. என்.சங்கரய்யாவுக்கு விருது வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலினுடன், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் விருது வழங்கப்பட்டது.
மேலும், என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு சான்றுதலும் வழங்கப்பட்டது. விருதுடன் அளித்த ரூ.10 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு என்.சங்கரய்யா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.