"நாங்கள் எடுத்த நடவடிக்கையால்தான் சென்னை தப்பியது" – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

"Chennai escaped because of the action we took" - Former Minister Jayakumar!

சென்னை:அதிமுக அரசு தூர்வாரிய இடங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த வாரம் பெய்த மழையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது.குறிப்பாக,சென்னையில் சாலைகள்,சுரங்கப்பதைகள்,வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,மழைநீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அமைச்சர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அதே சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார்கள்.

இந்நிலையில்,சென்னை திருவிக நகருக்கு சென்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதனையடுத்து,செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: “வெளிநாடுகளில் இருந்து நவீன கருவிகளை வரவழைத்து சென்னையில் அனைத்து மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டு சரியாக வைத்திருந்தோம். அதன்படி,தூர்வாரிய இடங்களை ஒவ்வொரு வருடமும் முறையாக பராமரிக்கணும்.ஆனால்,திமுக அரசு அதை செய்யவில்லை.

இதனால்,சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீரோடு கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.கண்துடைப்புக்காக ஒரு சில இடங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்துகின்றது,அரசு மெத்தனமாக உள்ளது.எதிர்க்கட்சியாக இருந்தாலும்,ஆளுங்கட்சியாக இருந்தாலும் அதிமுகவை குறை சொல்லுவதே திமுகவின் வேலை.

நாங்கள்(அதிமுக அரசு) எடுத்த நடவடிக்கையால்தான் சென்னை தப்பியது.இல்லையென்றால் இதைவிட மிகவும் மோசமான நிலைக்கு சென்னை உள்ளாகியிருக்கும்”,என்று கூறியுள்ளார்.