தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழா முடிவடையும் தருணத்தில் தேரை நிலைநிறுத்துவதற்காக ஊரின் எல்லையில் தேரை திருப்ப முயன்றபோது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்னும் சற்று நேரத்தில் விமானம் மூலம் முதல்வர் தஞ்சை சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்ல உள்ளார்.
இந்நிலையில்,களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக குடியரசுத்தலைவர் கூறியதாவது:
“தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியது வார்த்தைகளில் சொல்ல முடியாத சோகம். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
unknown nodeஇதற்கிடையில்,தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார். மேலும்,உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.