பீகாரில் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என முதல்வர் ட்வீட்.
பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்த திடீர் அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்வெளியேறியதால், முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்று பீகார் ஆளுநர் பகு சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இதன்பின், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவுடன் புதிய மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எம்பிக்களின் ஒருமித்த கருத்துடன் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவுடன் மீண்டும் கவர்னர் பகு சவுகானை சந்தித்து எதிர்க்கட்சியின் ஆதரவுடன், தனக்கு 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி, 8-வது முறையாக பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து, வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், பீகாரில் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தேஜஸ்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகாரில் மகா கூட்டணி திரும்புவது நாட்டின் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார்.
unknown node