ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் திறப்போம் – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரான் ஒத்துழைத்தாலும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

Hero Image

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து விரைவில் முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 11 அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஹார்மூஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும். அது தானாகவே திறக்கப்படும். ஈரான் ஒத்துழைப்பு கொடுத்தாலும், இல்லாவிட்டாலும் அது திறக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், “இது விரைவில் நடக்கும். நடக்கவில்லை என்றால், நாங்கள் ஒரு வழியில் அல்லது இன்னொரு வழியில் அதை முடித்துவிடுவோம்” என்றும் எச்சரித்தார்.டிரம்ப் தனது முக்கிய கவனம் ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதைத் தடுப்பதில்தான் இருப்பதாகவும், “அணு ஆயுதம் இல்லாதது என்பது 99 சதவீதம். மற்றவை இரண்டாம் பட்சம்” என்றும் தெரிவித்தார்.

இதேவேளையில், ஈரான் தரப்பு தனது ராணுவம் இன்னும் முழு தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அளித்த வாக்குறுதிகளை அடிக்கடி மீறி வருவதால், எங்கள் ஆயுதப் படைகள் 40 நாள் போரின்போது இருந்த அதே தயார் நிலையில் உள்ளன” என்று ஈரான் தெரிவித்துள்ளது.

டிரம்ப் மேலும் கூறுகையில், “ஈரானியர்கள் தங்களிடம் எந்தக் கார்டும் இல்லை என்பதை உணரவில்லை. சர்வதேச நீர்வழிகளைப் பயன்படுத்தி குறுகிய கால எக்ஸ்டார்ஷன் (மிரட்டல்) செய்வது தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் இன்று உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் பேச்சுவார்த்தைதான்” என்று தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டார்.

முன்னதாக, நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப், “ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின் விளைவு அடுத்த 24 மணி நேரத்தில் தெரியும்” என்று கூறினார். பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அமெரிக்க போர்க்கப்பல்கள் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் மூன்று தரப்பும் போரில் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கூறி வரும் நிலையில், தற்போதைய போர் நிறுத்தம் மிகவும் உடையக்கூடியதாகவே உள்ளது என்று பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். நீண்டகால பிரச்சினைகள் மற்றும் போட்டி நலன்கள் காரணமாக, அடுத்த இரண்டு வாரங்களில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவது கடினம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.