வாஷிங்டன் : இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு அதிக வரிகளை விதித்து வர்த்தகத்தில் சாதகமான நிலையை அனுபவித்ததாகவும், தற்போது அந்த நிலைமை மாறி அமெரிக்காவே அதிக பயன் பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ட்ரம்ப், "பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்காவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா மிக அதிக வரிகளை விதித்தது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இந்தியா மீதான வரி விதிப்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா நல்ல வருவாய் ஈட்டி வருகிறது" என்றார்.
மேலும் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
"இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் எனது நல்ல நண்பர். எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு ஜூன் 2 முதல் 4 வரை புதுடெல்லியில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக 12.5 சதவீத வரி விதிக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டாய தொழிலாளர் பயன்பாட்டை தடுக்காத நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த சூழலில், இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அவசரமாக மேற்கொள்வதை விட, நிலுவையில் உள்ள கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு பின்னர் ஒப்பந்தம் செய்வதே சிறந்தது என முன்னாள் இந்திய தூதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், இரு நாடுகளும் விரைவில் முக்கியமான ஒப்பந்தத்தை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
