இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிறப்பிப்பு...!

Sri Lankan President Gotabhaya Rajapaksa has declared an economic emergency to control rising food prices

உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசரநிலையை பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் சற்று சிக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வருடமாக கொரோனா பரவல் காரணமாக நாட்டின் வருவாய் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அன்னிய செலவாணி இருப்பு குறைந்து, இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் பொருட்களின் இருப்பு குறைவாக இருப்பதாலும், பதுக்கல் அதிகரித்து இருப்பதாலும் நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. எனவே அவற்றின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பதுக்கலை தடுக்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் தற்பொழுது இலங்கையில் பொருளாதார அவசர நிலையை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இதன் மூலமாக அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப் பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.