வீரமரணமடைந்த தமிழக வீரருக்கு முதல்வர்,துணை முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இதற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,லடாக் பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர், லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவத்தினரை சீன இராணுவம் தாக்கியதில், தம் இன்னுயிர் ஈந்த இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த நம் தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
வீரமரணம் எய்திய சகோதரர் திரு.பழனி அவர்களின் மறைவால் மீளாத் துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown node