விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
இந்தக் கூட்டம் வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்காக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசியலில் அடுத்த பெரிய போட்டியாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்சி தனது அமைப்பு மற்றும் கொள்கைகளை வலுப்படுத்தி வருகிறது.
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் முடிவடைந்த நிலையில், மேல்நிலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கட்சியின் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. பேரவை தேர்தலில் முக்கிய பங்காற்றும் பூத் கமிட்டியின் முக்கியத்துவத்தை கட்சியினரிடம் எடுத்துரைத்த தவெக தலைவர் விஜய் விரைவில் பூத் கமிட்டி தொடர்பான மாநாடு நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பூத் கமிட்டி உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மாவட்ட, ஒன்றியம், பகுதி, வட்டம் போன்ற பல்வேறு நிலைகளில் நிர்வாகிகளை நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு, விஜய் மாவட்டச் செயலாளர்களை நியமித்து, அவர்களுக்கு நகர மற்றும் ஒன்றிய அளவில் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்றைய த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் எதிர்கால திட்டங்களுக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.