114இல் 21 பேர் இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்துள்ளனர்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! 

21 Tamilans arrived Tamilnadu from Israel

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் பெரும்பாலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

போர் பதற்றம் அதிகமாகியுள்ள காரணத்தால் இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. “ஆபரேஷன் அஜய்” எனும் பெயரில் இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இந்தியர்களை அழைத்து செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு , நேற்று இரவு முதல் விமானம் இஸ்ரேலில் இருந்து புறப்பட்டது. இன்று காலை 6 மணி அளவில் அந்த விமானம் டெல்லி வந்தடைந்தது.

ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தின் கீழ் முதல் முயற்சியாக 212 இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர். அதில் 21 பேர் தமிழர்கள். அவர்கள் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் மூலம் சென்னை மற்றும் கோவை வந்தடைந்தனர். சென்னை வந்தடைந்தவர்களை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலில் நிறைய தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள்.  தமிழக முதல்வர் உத்தரவின் பெயரில் தமிழக அரசின் சார்பில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்காக, மத்திய வெளியறவுத்துறை அமைச்சகம்,  இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு. உதவி எண்கள் மூலம் பெறப்பட்ட தமிழர்களின் விவரங்கள் அவர்களிடத்தில் பகிரபட்டுள்ளது. அதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மீட்கும் பணியில் மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.

தமிழக வெளிநாடுவாழ் அமைச்சகமானது, வாட்சாப் குழுக்கள் மூலம் இஸ்ரேலில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து கண்காணித்து வருகிறது. அவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலஸ்தீனத்தில் தமிழர்கள் யாரும் இல்லை.

தற்போது வந்துள்ள 21 பேர், கோவை, திருவள்ளூர், கடலூர் , தேனி, விருதுநகர், புதுகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள். முதற்கட்டமாக மேற்கண்ட 21 பேர் 12.10.2023 அன்று இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 6 மணிக்கு புதுடெல்லி வந்தடைந்தனர்.

டெல்லியில் தமிழர்களை வரவேற்க வரவேற்பு மையம் அமைக்கபட்டது. புதுடெல்லியில் தமிழ்நாடு இல்லம் மூலம் அவர்களுக்கு உணவு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு டெல்லியில் இருந்து 14 நபர்கள் இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். கோவை விமான நிலையத்திற்கு 7 பேர் சென்றடைந்துள்ளனர். சென்னை வந்த 14 பேரில் 2 பேர் மாணவிகள், 12 பேர் மாணவர்கள் ஆவார். 3 மாதத்திற்கு முன்னர் இஸ்ரேல் சென்றவர்கள் கூட இன்று நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் தாயகம் திரும்ப கோரிக்கை விடுத்த 114 பேரில் முதற்கட்டமாக 21 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ளவர்கள் தினந்தோறும் இஸ்ரேலில் இருந்து தமிழகம் மீட்டு வர முயற்சி தொடர்ந்து நடைபெறும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்