சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற ‘அன்புக்கரங்கள்’ திட்ட தொடக்க விழாவில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக உருக்கமாகப் பேசினார். “நான் இருக்கேன். உங்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன். இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்று உறுதியளித்தார். இந்தத் திட்டம், பெற்றோர்கள் இருவரையும் இழந்த அல்லது ஒரு பெற்றோரை இழந்து மற்றொருவரால் பராமரிக்கப்பட இயலாத 6,000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவியை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் திராவிட இயக்கத்தின் மக்கள் நலக் கொள்கைகளை வலியுறுத்தி பேசிய அவர் ” அரசியல் என்பது சொகுசு அல்ல, மக்கள் பணி என்று கூறினார்.‘அன்புக்கரங்கள்’ திட்டம், கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து, அவர்களுக்கு தொடர் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. முதலமைச்சர், “திராவிட இயக்கம் சாமானிய மக்களின் எழுச்சியால் உருவானது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் எங்களுக்கு உழைப்பையே கற்றுத் தந்தனர். அரசியல் என்பது பொறுப்பு, பதவி அல்ல,” என்று கூறினார்.
கொரோனா நெருக்கடியில் ஆட்சிக்கு வந்தபோது, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கியதை நினைவுகூர்ந்த அவர், “இந்த நிகழ்ச்சியில் புன்னகைத்த குழந்தைகளின் முகங்கள் தான் அண்ணாவுக்கு நாம் செய்யும் மரியாதை,” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.மு.க.ஸ்டாலின், தி.மு.க. அரசின் திட்டங்கள் வாக்கு அரசியலுக்காக இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். “சிலர் அரசியலைக் கவர்ச்சி திட்டங்களாகப் பார்க்கிறார்கள். ஆனால், காலை உணவுத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி ஆகியவை வாக்கு அரசியலா? இவை மக்களின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை,” என்று விளக்கினார்.
தி.மு.க. ஆட்சி மக்களுடன் மக்களாக இருப்பதால், அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது என்று அவர் வலியுறுத்தினார். ‘அன்புக்கரங்கள்’ திட்டம், 6,000 குழந்தைகளுக்கு மாதாந்திர நிதியுதவியை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.இந்தத் திட்டம், தமிழக அரசின் சமூக நல முயற்சிகளில் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. முதலமைச்சர், “எங்களின் அரசியல், மக்களின் நலனுக்காகவே உள்ளது. இதில் சொகுசுக்கு இடமில்லை,” என்று கூறி, திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
