கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் பேருந்து சேவை – சென்னை மாநகராட்சி..!

"Oxygen on Wheels" bus service for corona patients - Chennai Corporation

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை திட்டத்தை நேற்று சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருவதால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் டெல்லி, உத்திரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைப்போன்று,தமிழகத்திலும் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.இதனால்,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில்,ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பானது (ஜிட்டோ) சென்னை மாநகராட்சியுடன் இணைந்து “ஆக்ஸிஜன் ஆன் வீல்ஸ்” என்ற சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி,ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் பொருத்தப்பட்ட நான்கு பேருந்துகள் அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன.

அந்த ஒவ்வொரு பேருந்தும் ஆறு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளைக் கொண்டுள்ளன.இதனால்,சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறலினால் ஆக்சிஜன் தேவை இருக்கிறபோதும் அல்லது மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி இருக்கும் பட்சத்தில், முதற்கட்டமாக இப்பேருந்துகளில் வைத்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைகளின் உள்ளே சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்.

சேவாவின் தலைவர் ஜெயின், நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் அவசரத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வாகனங்கள் 24×7 இயக்கப்படும் என்றார்.

இதுகுறித்து ஜெயின் அமைப்பின் நிர்வாக பயிற்சி அறக்கட்டளையின் தலைவர் அனில் ஜெயின் கூறுகையில்,”முதற்கட்டமாக இந்த சேவை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.இதனையடுத்து,விரைவில் 20 முதல் 25 வரையிலான ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பேருந்துகள் சென்னையில் அமைக்கப்பட உள்ளன.

மேலும்,மக்களுக்கு உதவுவதற்காக ‘ஜிட்டோ(JITO) ஃபார் யூ’ என்ற கொரோனா ஹெல்ப்லைன் – 94343 43430 ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்”,என்றுக் கூறினார்.