ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!
அரசின் நிதிநிலைமை சீராகும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் பேரவையில் தெரிவித்துள்ளார்.

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு அமைச்சர் சிவசங்கர் இன்று பேரவையில் பதில் அளித்து வந்தார். அப்போது காங்கிரஸ் எல்எல்ஏ கேட்ட கேள்வி பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராம கருமாணிக்கம் இன்று பேரவையில் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து சேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார். இதனை அடுத்து, பெண்களுக்கு திமுக அரசு விடியல் பயணம் அளிப்பது போல ஆண்களுக்கு அரசு இலவச பயண திட்டத்தை அளிக்குமா என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி கேட்டவுடன் அவையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.
அதற்கு சிரித்தபடி பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை குறித்த உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. நமது சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பெண்கள் தான். அவர்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு வந்து சமநிலைபடுத்த வேண்டும் என்று தான் தமிழ்நாடு முதலமைச்சர், கலைஞர் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்களை அளித்து வருகிறார்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை சீராகும் பட்சத்தில் ஆண்களுக்கும் இலவச பயணம் திட்டம் குறித்து அரசு ஆலோசிக்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.