மெட்ரோ ரயில் நாளை முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Chennai Metro administration has announced that Metro trains will run from tomorrow till 11 pm.

மெட்ரோ ரயில்கள் நாளை முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன.

மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. 21.06.2021 முதல் 21.08.2021 வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 176 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.35,200 வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன். தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

unknown node