உள்ளாட்சி தேர்தல் – கட்டுப்பாடுகளை விதித்த மாநில தேர்தல் ஆணையம்!
அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் பிரச்சாரங்களுக்காக எந்தவொரு வகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டியிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
எந்தவொரு பொது கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலகங்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமாயின் காவல்துறையின் எழுத்து மூலமான முன் அனுமதி பெற வேண்டும். மேலும் ஒலிபெருக்கிகளை பொது அமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறு அனுமதிக்கப்பட்ட 6 முதல் 10 வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும், அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியமைக்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.