ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா..சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

Traffic in Chennai has been diverted due to the arrival of AIADMK leaders from various districts of Tamil Nadu.

ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட உள்ளது. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

மெரினா கடற்கரையில் 50,422 சதுர அடியில் ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. நினைவிடத்தில் “மக்களால் நான், மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி” ஆகியவை வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  அதிமுகவினர் வருவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னைக்கு ஓ எம் ஆர், இ சி ஆர் வழியாக வரும் அதிமுக வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து சீனிவாசபுரம் கடற்கரை உட்புற சாலை மற்றும் மெரினா உட்புறச்சாலையில் நிறுத்தப்பட வேண்டும்.

காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரை வாகனத்திற்கு தடை. சரக்கு, வணிக வாகனம் பிராட்வே செல்லும் போது கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

பாரிமுனையில் இருந்து அடையாறு செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திரும்பி ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக அண்ணா சாலை, ராயப்பேட்டை சாலை வழியாகச் செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா..சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!