தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை மையம்

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (25-12-2022) காலை 08:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (26-12-2022) காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும்.

இதன் காரணமாக,இன்று ஞாயிற்றுக்கிழமை  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறைமாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

26-12-2022:இதனைத்தொடர்ந்து நாளை தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

27.12.2022:தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.12,2022, 29.12.2022:தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.