ஸ்டாலின் தோல்விக்கு, ஈபிஎஸ் வருத்தப்பட்டார் - அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்!

தி.மு.க, அ.தி.மு.க என்பதெல்லாம் திராவிட பாரம்பர்யம் கொண்ட கட்சிகள் எனவும் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Hero Image

புதுச்சேரி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டதாக புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கத்தால் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் புதுச்சேரிக்கு வந்துள்ள நிலையில், அவர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி விரைவில் புதுச்சேரி வருகை தரவுள்ளதாகவும் அன்பழகன் கூறினார்.

ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அன்பழகன், “தி.மு.கவும் அ.தி.மு.கவும் திராவிட பாரம்பரியம் கொண்ட கட்சிகள். ஸ்டாலின் தோல்வியடைந்ததற்கு எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகவும் வருத்தப்பட்டார்” என்றார்.மேலும், “அ.தி.மு.க ஒரு இரும்புக் கோட்டை. அதில் எந்த ஓட்டையும் இல்லை. எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி கடலில் குதிக்கச் சொன்னாலும் அவர்கள் குதிப்பார்கள்” என்று அவர் வலியுறுத்தினார்.

சென்னையில் வெயில் அதிகமாக உள்ளதால் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். இன்னும் சில எம்எல்ஏக்கள் புதுச்சேரி வரவுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.

இந்தச் சூழலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் டி.எஸ்.பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது திமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க தரப்பில் இருந்து வெளியான இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.