சென்னை : தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றொரு முக்கிய ஆதரவைப் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தவெகவுக்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் சிபிஐ தரப்பில் இருந்து ஆதரவுக் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் தவெகவின் தற்போதைய ஆதரவு எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளின்படி தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன்பின் காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை வழங்கியது.
இப்போது சிபிஐயின் ஆதரவுடன் மொத்தம் 114 எம்எல்ஏக்களின் பலத்தை தவெக பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 4 ஆதரவு தேவைப்படுகிறது.இந்த ஆதரவு அறிவிப்பு தவெகவுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையிலான அணி, மீதமுள்ள ஆதரவைப் பெறும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஏற்கெனவே ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள விஜய், அடுத்த சில நாட்களில் முழுமையான பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கையில் உள்ளார்.தவெகவுக்கு சிபிஐயின் ஆதரவு அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இன்னும் சில கட்சிகளிடம் இருந்து ஆதரவு கிடைத்தால், விஜய் தலைமையிலான அரசு உருவாகும் வாய்ப்பு உறுதிப்படும்.
