#BREAKING: பொதுத்தேர்வு – தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

Default Image

தமிழகத்தில் 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள மே 2022, 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்:  மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், வரும் 9-ஆம் தேதி (புதன் கிழமை) முதல் 16-ஆம் தேதி (புதன் கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

தக்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்:  மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், வரும் 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (10th) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்: கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

தேர்வுக்கால அட்டவணை: மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.தனித்தேர்வர்கள் மே 2022 பொதுத் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்க, சேவை மையங்களுக்கு வரும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுரைகளை அரசு தேர்வுகள் இயக்கம் வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்