சென்னை: புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் அவரது திருவுருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், விசிக தலைவர் திருமாவளவன் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.விசிக தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள்:
- ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுதல்
- மருத்துவத்தை அடிப்படை உரிமையாக மாற்றுதல்
- தனியார் துறையிலும் இடஒதுக்கீடு மூலம் சமூக நீதியை உறுதி செய்தல்
- சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச் சட்டம்
- மது மற்றும் போதைப்பொருட்களை முழுமையாக ஒழித்தல்
- இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுதல்
- இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்துதல்
- கடல், காடு, கனிம வளங்கள் அனைத்தும் மக்களுக்கே உரியவை என்ற கொள்கை
- விலையில்லா கல்வி
- மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு
- மகளிருக்கு 50% இடஒதுக்கீடு
- உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம்
- காவல் துறை மற்றும் சிறைத் துறையில் சீர்திருத்தம்
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திருமாவளவன், “இந்த அறிக்கை சமூக நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் பட்டியல் இன மக்களுக்கு உண்மையான நீதி வழங்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே பட்டியல் இன மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது” என்று வலியுறுத்தினார்.அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.
