டெல்லி: பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்துகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படை போர் விமானங்கள் தரையிறங்கும் பயிற்சி மேற்கொண்டது.
தற்போது அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படையும் தங்கள் ஆயுத சோதனையில் தீவிரம் காட்டியுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான DRDO மற்றும் இந்திய கடற்படை இணைந்து தயாரித்த MIGM (Multi-Influence Ground Mine) எனும் ஆயுதத்தை நேற்று சோதனை செய்து அதில் வெற்றி கண்டுள்ளது.
இந்த MIGM ஆயுதமானது குறைந்த அளவிலான வெடிபொருள் கொண்டு கடலுக்கு அடியில் சோதனை செய்யப்பட்டது. MIGM என்பது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி போன்றது. இது எதிரி நாட்டு அதிநவீன போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் போன்றவற்றை குறிவைத்து தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம், புனேவில் உள்ள DRDO-ன் உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவை இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மைக்ரோசிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகியவை இந்த ஆயுதம் உருவாக்குதலில் உற்பத்தி கூட்டாளிகள் ஆகும்.
இந்த வெற்றிகரமான சோதனைக்கு பிறகு MIGM யுத்தமானது இந்திய கடற்படையில் சேர்க்க தயாராக உள்ளது என்பதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓவின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் உறுதிப்படுத்தினயுள்ளார்.
unknown node